வியட்நாம் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பூ குவாக் (Phu Quoc) தீவு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது. இந்த விபத்தில் 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உட்பட ஏறத்தாழ 18 இந்தியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் வெளியாகி வரும் தகவல்கள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்றன.
உயிரிழந்தவர்களில், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு. பாலாஜி நடேசன், பீமா நகரைச் சேர்ந்த திரு. ஷேக் அப்துல்லா, எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த திரு. அழகுராஜன் சிவசாமி ஆகியோரும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.
மேலும், காணாமல் போயிருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றும் மனதார வேண்டிக்கொள்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் வியட்நாம் அரசின் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தை நான் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். பாதிக்கப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் தேவையான உதவிகள் தாமதமின்றி கிடைப்பதையும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வருவதையும், அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.
இந்த துயரமான தருணத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுடனும் நான் உறுதுணையாக நிற்கிறேன்.
துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி திமுக 11.07.2026




