சங்கொலி இதழின் இரண்டாம் இதழில் (09.02.1996) அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, மாணிக்க சண்முகம் எழுதிய, 'அண்ணாவின் கடைசி நாட்கள்' என்ற சிறப்புக் கட்டுரை வெளியானது. அறிஞர் அண்ணா அவர்கள், முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல், அண்ணாவின் மறைவு, அண்ணா மறைவுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் அண்ணாவின் அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சிகள் இவைகளின் தொகுப்பாக அண்ணாவின் பெருமைமிகு நினைவுகளை அக்கட்டுரை படம்பிடித்துக் காட்டியது. இதன் அடுத்த இதழில் இருந்து (16.02.1996) வைகோ பதில்கள் என்ற பகுதி வெளிவந்தது. தோழர்களின் அய்ய வினாக்களுக்கு, பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அறிவார்ந்த விடைகள் வாசகர்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டன. அதன் அடுத்த திங்களில் அப்போது நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மதுரையில் கழகம் தேர்தல் சிறப்பு மாநாட்டினை நடத்தியது. அந்த மாநாட்டில், சங்கொலி வெளியிட்ட தேர்தல் மாநாட்டு, சிறப்பு மலர், 10 ரூபாய் விலையில், 80 பக்கங்களுடன் (30.03.1996) வெளியிடப்பட்டது. தேர்தல் தொடர்பான பல்வேறு அரிய தகவல்களின் தொகுப்பாக இந்த மலர், மலர்ந்து மணம் பரப்பியது! சங்கொலியின் முதல் மலர் இதுதான்! இதற்கடுத்து, இரண்டு திங்களில், அறிஞர் அண்ணாவின் அன்புத் துணைவியார், அண்ணியார் ராணி அண்ணா அவர்கள் (06.05.1996) இயற்கை எய்திய துயரம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, 17.05.1996 சங்கொலி இதழ், அண்ணியார் ராணி அண்ணா அவர்கள் நம்நாடு பேசுகிறது வார இதழில் (1989) அளித்த நேர்காணலை பெருமையுடன் வெளியிட்டது. அண்ணா அவர்கள் அண்ணியாரை பெண்பார்க்க வந்தது தொடங்கி, அவர்களின் திருமணம் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும், அந்த பேட்டியில், அண்ணியார் அவர்கள் மனம் திறந்து பேசியதை படித்த வாசகர்கள் மனம் நெகிழ்ந்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள். முதல் ஆண்டின் நிறைவு காலத்தில், நவம்பர் 29 நாளிட்ட இதழில் இருந்து, "திராவிட இயக்கத்தின் 80 ஆண்டுகள்" என்ற கட்டுரைத் தொடரை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் எழுதத் தொடங்கினார். திராவிட இயக்கத்தின் 80 ஆண்டு கால வரலாற்றினை, சுயமரியாதை இயக்க நீதிக்கட்சி வரலாற்றில் இருந்து தொடங்கி, கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை, பட்டியலிட்டுக் காட்டும் பொதுச்செயலாளரின் கட்டுரைத் தொடர், திராவிட இயக்க வரலாற்று ஆவணமாக வாரந்தோறும் வெளிவந்தது. க.திருநாவுக்கரசு அவர்களின் 'அண்ணாவின் திமுக' கட்டுரைத் தொடர் சங்கொலியில் வெளிவந்த நிலையில், பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தன் கட்டுரைத் தொடரை பெருந்தன்மையுடன் நிறைவு செய்து கொண்டார். முதலாண்டு சங்கொலி இதழ்களில், 'ஏவுகணை', 'புரட்சிப்புயல்' என்ற தலைப்புகளில், வெளிவந்து கொண்டிருந்த கழக இதழ்கள் குறித்த விளம்பரங்கள் இடம்பெற்று இருந்தன. 'புரட்சிப்புயல்' என்ற இதழ் மாத இதழாக சா.சல்மான்பாரிசு என்பவரை ஆசிரியராகவும் கோ.குப்புக்கண்ணன் என்பவரை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்தன. தாம்பரம் நகர செயலாளர் வீ.பழனி, செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் நன்மாறன், நகர்மன்ற உறுப்பினர் கே.ஆர்.தாமோதரன், குபேரா ஜெய்சங்கர், ஆர்.சிவராமகிருஷ்ணன், சா.ஜவஹர் ஆகியோரை ஆசிரியர் குழுவாக கொண்ட 'புரட்சிப்புயல்' ஏடு ஓராண்டு வெளிவந்து, முதலாம் ஆண்டு நிறைவு விழாவையும், தலைவர் வைகோ அவர்களை அழைத்து தாம்பரத்தில் நடத்தியது. இது தொடர்பாக சிறப்பு மலர் ஒன்றையும் 'புரட்சிப்புயல்' ஏடு வெளியிட்டது. 1998 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6, 7 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க ஏடுகள் தொடர்பான கருத்தரங்கத்தில் உரையாற்றிய சிந்தனையாளன் இதழ் ஆசிரியரும் மா.பெ.பொ.க. பொதுச்செயலாளருமான அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள், அக்கருத்தரங்க நிகழ்வில் சங்கொலி, புரட்சிப்புயல் ஆகிய ஏடுகளை காட்டி, தன் உரையினை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது ஆகும்! 'சங்கொலி' 5 ஆம் ஆண்டு இதழில் இருந்து இதழ் தோறும் எண்ணற்ற கருத்துப் படங்கள் (கார்ட்டூன்) இடம்பெற்றன.

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »




