மாண்புமிகு ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராம்மோகன் நாயுடு அவர்களை அவரது இல்லத்தில் 04.06.2026 அன்று துரை வைகோ எம்.பி., சந்தித்து உரையாடினார்.
அப்போது, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, தற்போதைய 2,423 மீட்டர் (7,949 அடி) நீளமுள்ள ஓடு தளத்தை 3,810 மீட்டர் (12,500 அடி) வரை நீட்டிக்கும் திட்டத்தின் அவசியத்தையும் அவசர தேவையையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
ஏற்கனவே, மாண்புமிகு பிரதமர் அவர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திருச்சி விமான நிலைய உட்கட்டமைப்பை அமைத்துத் திறந்துவைத்துள்ளதை சுட்டிக்காட்டி, அதை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு ஓடுதள விரிவாக்கம் மிகவும் அவசியம் என்று விரிவாக எடுத்துரைத்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் 50% மட்டுமே முடிவடைந்திருந்த நிலையில், தான் பொறுப்பேற்ற கடந்த 20 மாதங்களில் தனது தொடர் முயற்சியில் மீதமுள்ள 50%-இல் 90% நிலம் (இப்போது வரை மொத்தம் 95% நிலம்) கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதே நேரம், விமான ஓடுதள விரிவாக்கப் பணிக்கு தேவையான 7.67 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியும் நிறைவடைந்து, இழப்பீட்டுத் தொகை வழங்குவது மட்டுமே நிலுவையில் உள்ளது. இதனை விரைவில் முடித்து ஓடுதள விரிவாக்கப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது விமான நிலைய ஆணைய அதிகாரிகள், இன்னும் 36 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக தெரிவித்தனர். உடனடியாக அதை மறுத்து, ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவையானது வெறும் 7.67 ஏக்கர் மட்டுமே என்றும், மீதமுள்ளவை வேறு தேவைகளுக்கானவை என்றும், 7.67 ஏக்கர் நிலத்தின் கையகப்படுத்தும் பணி ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாகவும் தெளிவுபடுத்தினார். தனது விளக்கத்தை அதிகாரிகளிடம் கூறியதும், அவர்களும் அதை ஒப்புக் கொண்டனர். எனவே, ஓடுதள விரிவாக்கப் பணியை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக முடித்துத் தருமாறு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு துரை வைகோ எம்.பி., நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன், திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பகுதிக்கு அருகிலுள்ள கீழக்குறிச்சி, கீழக்குறிச்சி தெற்குத் தெரு, நத்தமடிப்பட்டி, முடுக்குப்பட்டி மற்றும் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளின் மக்கள் பயன்படுத்தும் இணைப்புப் பாதையைப் பாதுகாக்கும் வகையில் சுரங்கப் பாதை (Underpass) அமைக்கும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஓடுதள விரிவாக்கத்தின் காரணமாக பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் இந்த இணைப்புச் சாலை மூடப்படாமல், அதற்கு மாற்றாக சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தனது கருத்துகளை முழுமையாக எடுத்துரைத்தார்.
அடுத்ததாக, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு மையத்தில் ஏர் கூரியர் கார்கோ சேவையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 2022-ஆம் ஆண்டு சுங்கத்துறையால் அறிவிக்கப்பட்ட திருச்சி சரக்கு மையத்தில் ஏர் கூரியர் கார்கோ சேவை தொடங்கப்படாமல் இருப்பதை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையும், இந்தச் சேவைக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்கனவே உருவாக்கப்பட்டு தயாராக உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
இந்தச் சேவை தொடங்கினால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதோடு, ஏற்றுமதியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME), மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் பயன் கிடைக்கும் என்று வலியுறுத்தினார். கூரியர் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில், திருச்சி சரக்கு மையத்தில் (O&M) இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டால் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டமைப்பு (PPP) முறையிலோ இச்சேவை மையத்தை இயக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்ததை எடுத்துரைத்தார். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் இடைக்கால ஏற்பாட்டுக்கும் அனுமதி வழங்குமாறு கோரினார். தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு இது மிக முக்கியமான வாய்ப்பு என்பதால், ஏர் கூரியர் கார்கோ சேவையை விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தினார்.
இறுதியாக, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரேடார் அமைப்பு நிறுவும் திட்டம் குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்தார். இந்தத் திட்டம் விமானப் போக்குவரத்து மேலாண்மை, செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வரவேற்கத்தக்க முயற்சி என்றாலும், முன்மொழியப்பட்டுள்ள ரேடார் அமைப்பின் தற்போதைய இடம் மற்றும் உயரம் திருச்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை என்று சுட்டிக்காட்டினார். எனவே, ரேடாரை மற்றொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவது அல்லது அதன் உயரத்தை அதிகரிப்பது குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யுமாறும் துரை வைகோ எம்.பி., கேட்டுக்கொண்டார்.
அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர், இந்த முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.




