எஸ்.டி.பி.ஐ கட்சி என்று அழைக்கப்படும் இந்திய சமூக நீதி ஜனநாயக கட்சி (Social Democratic Party of India) இன்று 17 ஆண்டுகளை நிறைவு செய்து 18 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது என்பதை அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!
'பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை' என்ற முழக்கங்களோடு சமூகநீதி, மதச்சார்பின்மை, சமூக சமத்துவம், சோசலிசம் முதலான உயரிய கொள்கைகளுக்காக நாடு தழுவிய அளவில் பாடுபடுகிற கட்சி எஸ்.டி.பி.ஐ என்பதை நாம் அறிவோம்; நாடும் அறியும்!
சிறுபான்மையினர் நலன் ஒடுக்கப்பட்டோர் நலன், ஆகியவைகளுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மனித சமுதாய நலனுக்காகவும் தொண்டாற்றி ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்பினையும் காத்து வரும் எஸ்.டி.பி.ஐ இயக்கத்திற்கு என் கனிவான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் M.K.Faizy, தமிழ் மாநில தலைவர் முகமது முபாரக் ஆகியோருக்கும், அடக்குமுறைகளுக்கும், ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல் மனித நேயம் காக்கும் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் என் பாராட்டுக்கள்!
சிறுபான்மையினர் உரிமைகளை கண்ணை இமை காப்பதுபோல் காக்கும் குறிக்கோள் கொண்ட எங்கள் மறுமலர்ச்சி திமுக சார்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அனைவருக்கும் உதய திருநாள் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 21.06.2026 அன்று விடுத்துள்ள அறிக்கை.



