22.06.2026 அன்று மாலை தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் திரு. ஆர். நிர்மல் குமார் அவர்களை நேரில் சந்தித்து முக்கியமாக நான்கு மின்சாரத்துறை சம்பந்தமான கோரிக்கைகளை வழங்கி அதன் தேவை குறித்து துரை வைகோ எம்.பி., விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு மின்வாரியத் தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமன ஆணை பெறாமல் காத்திருக்கும் 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்குவதுடன், நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் பணியை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் நீண்டகால தேவையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள கடலையூர் 33/11 கே.வி. துணை மின் நிலையத் திட்டத்தை விரைவுபடுத்தி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடையற்ற மின்விநியோகம் கிடைக்க தேவையான பணிகளை உடனடியாக தொடங்குமாறும் வலியுறுத்தினார்.
மேலும், திருச்சி மாநகரில் விபத்துகள் அதிகம் நிகழும் G-Corner பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) செயல்படுத்தவுள்ள உயர்மட்ட சுழற்பாலம் திட்டப் பணிகளை தாமதமின்றி முன்னெடுக்க, TANTRANSCO மின் பரிமாற்றக் கட்டமைப்புகளை இடமாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டு தொகைகளை உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து அமைச்சரிடம் உரையாடுகையில், திருச்சி மக்களின் 15 ஆண்டு காலத்திற்கு மேலாக நிலுவையிலேயே காத்திருந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற, தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம், ஒன்றிய நிதி அமைச்சகம், ஒன்றிய ரயில்வே அமைச்சகம், மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகிய துறை அமைச்சர்களை, அதிகாரிகளை பல முறை சந்தித்து, இத்திட்டத்திற்கான தேவையை விரிவாக எடுத்துரைத்து, அனைவரையும் மையப் புள்ளிக்கு நகர்த்தி, இந்த திட்டத்தை, பல சிரமங்களுக்கிடையில் இந்நிலைக்கு தான் முன்நகர்த்தி வந்துள்ளதையும், இந்த திட்டத்தின் அவசியத்தையும், தனது முன்னெடுப்பின் தீவிரத்தையும் அமைச்சரிடம் எடுத்துக்கூறி, திட்டப் பணிகளுக்குத் தேவையான மின் பரிமாற்றக் கட்டமைப்புகளை இடமாற்றம் செய்வதற்கான மதிப்பீடுகளை TANGEDCO விரைவாக வழங்கி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் இத்திட்டங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்பட உறுதி செய்ய வேண்டுமெனவும் அமைச்சர் அவர்களிடம் எடுத்துக்கூறி கோரிக்கை மனுக்களை துரை வைகோ எம்.பி. வழங்கினார்.
அதேநேரத்தில், திருச்சி மாருதி நகர், ஸ்ரீரங்கம் Y-Corner சந்திப்பு மற்றும் சஞ்சீவி நகர் பகுதிகளில் NHAI சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள வாகன சுரங்கப்பாதை (Vehicular underpass) திட்டத்திற்கும் இதே கோரிக்கையை முன்வைத்தார். அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்டு, துரை வைகோ எம்.பி., அவர்களின் விரிவான விளக்கங்களையும் கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள், பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாக உறுதியளித்தார்.






