22.06.2026 அன்று மாலை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை சந்தித்து, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி போக்குவரத்துக் கோட்டம் உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கை மனுவை வழங்கி, அதன் அவசியத்தை துரை வைகோ எம்.பி., விரிவாக எடுத்துரைத்தார்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரட்டுக் கழகத்தின் (TNSTC) கும்பகோணம் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய வணிக மையமாகவும், கல்வி, தொழில், சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் தலமாகவும் வளர்ந்து வரும் திருச்சி மாநகரின் மக்கள் தொகை தற்போது 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால் பொதுப் போக்குவரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்றும், தமிழ்நாட்டில் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் தனிப்போக்குவரத்துக் கோட்டத் தலைமையிடம் இல்லாத ஒரே நகரம் திருச்சி மட்டுமே. இதன் காரணமாகப் புதிய பேருந்து வழித்தடங்கள் உருவாக்கம், பேருந்துகள் ஒதுக்கீடு, வாகன மேலாண்மை மற்றும் சேவை விரிவாக்கம் உள்ளிட்ட நிர்வாக முடிவுகளில் கணிசமான தாமதங்கள் ஏற்பட்டு வருவதையும் துரை வைகோ எம்.பி., சுட்டிக்காட்டினார்.
இக்கோரிக்கையை கடந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ். எஸ். சிவசங்கர் அவர்களுக்கு 08.10.2025 அன்று சமர்ப்பித்திருந்ததையும், தற்போது 04.06.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்து விளக்கியதையும் தெரிவித்தார். நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் இம்முக்கிய கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து, தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தினார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான இந்த அரசு, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனிப் போக்குவரத்துக் கோட்டத்தை கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கித் தரும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்து துரை வைகோ எம்.பி., விடைபெற்றார். அமைச்சர் அவர்களும் கோரிக்கையின் அவசியத்தை புரிந்துகொண்டு உடன் பரிசீலித்து நல்ல முடிவை எட்டுவதாக உறுதியளித்தார்.
மேலும், இன்னொரு கோரிக்கையாக, மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கமான, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் (MLF) இணைப்புச் சங்கமான, போக்குவரத்து தொழிற்சங்கத்திற்கு அனைத்து கோட்ட மைய அலுவலகங்களில் சங்கப் பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை கடிதம் வழங்கி கேட்டுக்கொண்டார்.






