தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து 19.06.2026 அன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அத்தீர்மானத்தின் மீது மறுமலர்ச்சி தி.மு.க சார்பில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் ஆற்றிய உரை வருமாறு:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சினையில் நாம் கவனமாக இருக்கிறோம்; கண்ணும் கருத்துமாக இயங்குகிறோம் என்பதை நாட்டுக்குத் தெரிவிக்கின்ற வகையிலும், நமது உரிமையைப் பாதுகாக்கத் தயங்க மாட்டோம் என்கிற வகையிலும் பக்கத்து மாநிலத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இதனை உணர்த்தின்ற வகையிலும் மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்கின்ற தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தீர்மானத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வரவேற்கின்றேன்.
மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் - காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் எங்கள் கட்சி இங்கே ஆதரிக்கின்றது என்று குறிப்பிட்டார்கள். ஆனால் கவலைக்குரிய செய்தி என்னவென்றால், கர்நாடக முதலமைச்சர் மே 22 ஆம் தேதி கொள்ளேகாலில் பேசுகின்றபோது, "67.14 டி.எம்.சி. தண்ணீரும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தியும் வழங்கக் கூடிய 9000 கோடி மதிப்பிலான மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கான டி.பி.ஆர். என்று சொல்லப்படும் விரிவுத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது". ஒன்றிய நீர்வளத் துறையின் அனுமதியைப் பெற்று உடனடியாக பூமி பூஜை தொடங்கும் என்று வெட்ட வெளியில் செய்தியாளர்களிடத்தில் அறிவித்துள்ளார். அதற்கு எதிர்வினை ஆற்றிய தலைவர் வைகோ அவர்கள், பத்துக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை இணைத்து, இதே சென்னை பட்டணத்தில் ஜூன் 2 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட பெருமைக்குரிய திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், எண்ணற்ற சட்டப் போராட்டங்களை நடத்தி, மக்களை அணிதிரட்டி காவிரி நதி நீரில் நமக்கு குறைந்தபட்சம் இவ்வளவு தண்ணீர் உரிமை உண்டு என்பதை நிலைநாட்டிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் எவரும் மறைக்க முடியாது.
அதே போல் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பாதுகாத்தனர். அப்படி அனைவரும் இணைந்து குறைந்தபட்ச நீர் உரிமையை நிலைநாட்டி இருந்தாலும்கூட, கவலைக்குரிய செய்தி என்னவென்றால், 40 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் 15.85 இலட்சம் ஹெக்டேர் சாகுபடி பாசனப் பரப்பு தரிசாகக் கிடக்கிறது.
ஆனால் கர்நாடகாவில் என்ன நிலைமை என்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு 9.96 இலட்சம் ஹெக்டேர் தான் அதன் பாசனப் பரப்பு. 40 ஆண்டுகளுக்குப் பிந்தைய இன்றைய நாளில், அதன் பாசனப் பரப்பு எவ்வளவு என்று கேட்டால், 38.25 இலட்சம் ஹெக்டேர் ஆகும்.
அப்படி என்றால், காவிரி ஆற்றை எவ்வாறெல்லாம் கர்நாடக அரசு தனக்கு மட்டுமே சொந்தம் என கொண்டாடி வருகிறது என்பதனைத் தெரிந்து கொள்ள முடியும். காவிரி நடுவர் மன்றமோ, உச்சநீதிமன்றமோ வழங்கிய நிரந்தர உத்தரவுகள் எதையும் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, திராவிட முன்னேற்றக் கழக அரசும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் மாறி மாறி ஆட்சியில் இருந்தபோது நிலைநாட்டியிருக்கின்ற இந்தக் குறைந்தபட்ச காவிரி நதிநீர் உரிமையையும் இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
மேகேதாட்டுவில் அணையைக் கட்டி 67 டி.எம்.சி. தண்ணீரை நிறுத்திக் கொண்டு விட்டால், ராசிமணலில் தடுப்பணை கட்டுவோம் என்று அறிவித்திருக்கின்ற கர்நாடக அரசு, அதிலும் 12 டி.எம்.சி. தண்ணீரை நிறுத்திக் கொண்டுவிட்டால், காவிரி நடுவர் நீதிமன்ற ஆணையின்படி கொடுக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. தண்ணீரை எவ்வாறு தமிழ்நாட்டுக்குக் கொடுக்க முடியும்?
ஆகவே, தமிழ்நாடு அரசு இன்றைக்கு அறிவித்திருக்கின்ற தீர்மானத்தின் மீது மேலும் அழுத்தம் கொடுங்கள். கர்நாடக அரசு அணைகட்ட இந்திய ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானத்தில் இருக்கிறது. ஆனால் நாங்கள் தெரிவிக்க விரும்புவது, இந்திய ஒன்றிய அரசும்கூட தமிழ்நாடா? கர்நாடகமா? என்று வருகிறபோது, ஒன்றிய அரசு கர்நாடகத்தின் பக்கம் தான் பல சமயங்களில் சாய்ந்திருக்கிறது என்பதை தமிழ்நாடு அரசு கவனமாக மனதில் வைத்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமர்ப்பித்திருக்கின்ற இந்தத் தீர்மானத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழுமையாக வழிமொழிகிறேன்; ஆதரிக்கிறேன்.
இவ்வாறு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் உரையாற்றினார்.






