செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

'ஹபீபி' திரைப்படம் ஆஸ்கர் விருதைவிட உயர்ந்த விருதைப் பெறக்கூடிய தகுதி வாய்ந்தது!

'ஹபீபி' திரைப்படம் ஆஸ்கர் விருதைவிட உயர்ந்த விருதைப் பெறக்கூடிய தகுதி வாய்ந்தது!

கடையநல்லூரை பின்னணியாகக் கொண்டு 1980 முதல் 2024 வரையிலான இசுலாமிய மக்களின் வாழ்க்கை, காதல், குடும்ப உறவுகள் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் துயரங்களை சித்தரிக்கும் 'ஹபீபி' திரைப்படத்தை கழகப் பொதுச்செயலாளர் வைகோ மிகுந்த பாராட்டுகளுடன் விமர்சித்துள்ளார்.

'ஹபீபி' திரைப்படம் ஆஸ்கர் விருதைவிட உயர்ந்த விருதைப் பெறக்கூடிய தகுதி வாய்ந்தது! 'ஹபீபி' வெறும் திரைக் காவியம் அல்ல, காலத்தை வென்று நிற்கும் அமர காவியம். காதல் உணர்வுகளை மெல்லிய மயிலிறகால் இதய நாடிகளை வருடிக் கொடுக்கும் நெகிழ்வான சுகம் என் கண்களுக்கும், இதயத்திற்கும் கிடைத்தது.

பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தின் பகுதியாக இன்றைய தென்காசி மாவட்டத்திற்குள் அடங்கியதாக உள்ள கடையநல்லூர், பட்டணமும் ஆகிவிடாமல், பட்டிக்காடாகவும் இருந்துவிடாமல் நகர்புற தோற்றத்தோடு அமைந்துள்ள நல்லூர் ஆகும். இசுலாமிய பெருமக்கள் பெருமளவில் வாழும் இந்தக் கடையநல்லூரை கருவாகவும், உருவாகவும் கொண்டு, அந்த ஊர் மக்கள் வாழ்க்கையை 1980 இல் தொடங்கி, 2024 வரை சித்தரிக்கப்பட்டுள்ள 'ஹபீபி' திரைப்படத்தைப் பார்த்த மன அதிர்விலிருந்து இன்னமும் என்னால் மீள முடியவில்லை. இந்தத் திரைக் காவியத்தை இயக்கிய மீரா கதிரவன் இமயத்தின் உச்சிக்கே இதனைக் கொண்டு சேர்த்து விட்டார்.

திரைப்படம் தொடங்கும் நிமிடத்திலிருந்து நிறைவு பெறும் வரை ஒரு விநாடி கூட சலிப்பு ஏற்படவில்லை. மாறாக, அந்தக் கதாபாத்திரங்களோடும், அவர்கள் வாழ்க்கையோடும் ஒன்றிணைத்து என்னைக் கட்டிப் போட்டுவிட்டார்.

இதற்குக் கதையும், திரைக் கதையும் அமைத்த முகமது அமீன் போற்றுதலுக்குரிய பண்பாளர் ஆவார். அவருடைய எழுதுகோல் எனும் தூரிகையால் அஜந்தா வண்ண ஓவியங்களை வரைவதுபோல் என் நெஞ்சத் திரையில் வரைந்துவிட்டார். கடையநல்லூரில் வாழும் இசுலாமிய மக்கள் எந்த உச்சரிப்போடு சொற்களைப் பயன்படுத்துவார்களோ, அப்படியே அட்சரம் பிசகாமல் அதை நிலைநாட்டி விட்டார்.

நான் சமீப காலங்களில் பார்த்த தமிழ் திரைப்படங்களில், மலையாள படங்களில் மிகவும் லயித்து ரசித்த படங்கள் அநேகமாக மம்முட்டியும், மோகன்லாலும் நடித்த படங்களாகும். அந்தத் தமிழ், மலையாள படங்களை நான் மெய்மறந்து ரசித்தது உண்டு. ஆனால், என் கண்கள் கலங்கியது இல்லை, விழிகள் குளமானது இல்லை.

வைகோ வாழ்த்து கல்லூரியில் அடியெடுத்து வைத்த நாட்களில் பாசமலர் திரைப்படத்தை 15 ஆவது முறை பார்த்த போதும் என் கைக் குட்டை கண்ணீரால் நனைந்தது உண்டு. ஞானஒளியைப் பார்த்தபோது துக்கம் நெஞ்சை அடைத்தது உண்டு. நெஞ்சில் ஓர் ஆலயத்திலும், சுமைதாங்கியிலும் நான் உள்ளுக்குள் விம்மியது உண்டு. பாரதிராஜாவின் 16 வயதினிலே என்னை பிரமிக்க வைத்தது. அலைகள் ஓய்வதில்லையும், காதல் ஓவியமும், கடலோரக் கவிதைகளும், முதல் மரியாதையும் கசக்கப்பட்ட மலரைப் போல என் இதயத்தை நோகச் செய்தது உண்டு. காதலை சித்தரிப்பதில் பாரதிராஜாவுக்கு நிகர் பாரதிராஜாதான்.

ஆனால், 'ஹபீபி' திரைப்படத்தில் கதையின் நாயகனாக வருகிற அபுதாஹீர் பாத்திரம் என்னை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டது. அப்பாத்திரமாக மாறிய நடிகர் ஈசா ஒப்புமை சொல்ல முடியாத கலைஞராகத் திகழ்கிறார். முகமது யூசுப் எனும் அப்பா பாத்திரத்தில், திரைப்படத் துறையில் சாதனை புரிந்துள்ள கஸ்தூரிராஜா, கைத்தறி ஓட்டும் யூசுப்பாக "தறி சத்தத்தில்தான் நான் பிறந்தேன்; தறி சத்தத்தில்தான் வளர்ந்தேன். அந்தச் சத்தத்தின் ஓசை என் நெஞ்ச சுவர்களில் மோதி ஒலிக்கும் இந்தக் கடைசி வேளையிலும் என் உயிர் துடிதுடித்துச் சென்றுவிடும். மகனே, என் ஜனசாவை இங்கேயே நீராட்டிக் கொண்டு போய் புதைத்து விடுங்கள்" என்று சொல்லிய ஓரிரு நிமிடங்களுக்கு உள்ளாகவே அவர் உயிர் ஓய்ந்து, முகம் குப்புற தரையில் சவமாகச் சாய்ந்தாரே! அப்போது என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தத் திரைக் காவியத்தில் மின்னல் வெட்டுக்களாக காதலனும், காதலியும் ஒரு வார்த்தைகூட பேசாமலே அவர்களின் காதல் தாகத்தை பரிமாறிக் கொண்டார்களே! நள்ளிரவுப் பொழுதில் அவன் அவளைச் சந்திக்கச் சென்றபோது, வீட்டார் கண் விழித்து யாரடா? என்று சத்தம் கொடுத்து விரட்டவும், தலை தெறிக்க ஓடிய பின்பும் அவன் பிடிபட்டதும், அதற்கு என்ன? என்பதையே கேள்விக்குறியாக்கிவிட்டு, அபுதாஹீர் வளைகுடா நாட்டுக்குச் சென்று திரும்பியதாக காவியம் தொடர்கிறது.

இடைவேளைக்குப் பின்னர் ஒரு காட்சி! அவன் பிடிபட்டபோது, இசுலாமிய மக்கள் சபையைக் கூட்டி, அவனை நிற்க வைத்து கேள்விகளால் வதைத்தபோது, இதய நாயகியைக் காணச் சென்றேன் என்று கூறாமல், நான் களவாடச் சென்றேன் என்று கூறியதும், அதற்கு அவர்கள் முட்கள் நிறைந்த விளாரைக் கொண்டு அவன் முதுகை அடித்துத் துவைத்தபோது, இரத்தத் துளிகள் அவன் மேனியில் சிதற, ஆயிரம் ரூபாய் அபராதம் என்று சபை தீர்ப்புச் சொல்ல, கசையடி வாங்கிக் கொண்டே தாங்காது என்று அவன் ஒலமிட, தொள்ளாயிரம் என்ற போதும், எண்ணூறு, எழுநூறு, ஆறு நூறு, ஐநூறு, நானூறு என்று வரிசையாகச் சொன்ன போதும், அவன் தாங்காது தாங்காது என்று ஓலமிட, அருகிலிருந்து இதனைப் பார்த்துக் கொண்டே இருக்கின்ற அவன் தந்தை யூசுப் வேதனையால் துடி துடிப்பதும் முன்னூறு என்றபோதுதான் தாங்கும் என்று அபுதாஹீரும், தந்தையும் ஒருசேர சொல்ல, அந்தக் காட்சி என் இதயத்தைப் பிளந்தது. என் கன்னங்களில் கண்ணீர் உருண்டுகொண்டே இருந்தது.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை, விசைத்தறி நுழைவால் பாழாகிப் போனதும், ஊரின் போக்கே மாறியதும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அபுதாஹீருக்கு மணம் முடித்து வைக்கலாம் என்று ஒரு பெரிய குடும்பத்தோடு சம்மந்தம் பேசுவதும், அந்தக் குடும்பத்துப் பெண் கதிஜா பர்வீன் நூலகத்தில் அபுதாஹிரைச் சந்தித்துப் பேசுவதும் இயற்கையாகவே அமைந்தன. அந்தப் பாத்திரத்தில் நடித்த தனஸ்ரீ சுதாகரன் தன் பங்கை சிறப்பாகவே செய்துவிட்டார். ஆனால், திரைக் கதையின் நாயகியான நிலோஃபர் நிஷாவாக உருவெடுத்த மாளவிகா மனோஜ் அழியாத காதல் ஓவியமாக தன்னை நம் நெஞ்சில் பதிந்தாள்.

யூசுப்பின் குடும்பத்தை வறுமை வளைத்து விட்டதால், அபுதாஹீர் வளைகுடாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் வட்டி கொடுப்பதாக வாங்கியவன், "என்னுடைய கம்பெனியே நொடித்துப் போய் விட்டது. நான் வாங்கிய பணத்தை எவருக்கும் கொடுக்க வாய்ப்பில்லை" என்று கூறியபின் அபுதாஹீன் உலகம் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கி விட்டது.

மீண்டும் விளைகுடாவிற்குப் பயணிக்க அபுதாஹிர் முனைந்தபோது, போக்குவரத்துத் தடைபட்டு, விமான நிலையம் செல்ல முடியாமல், கறம்பக் காடுகள், சரிவுகள் வழியே அவன் நடந்ததும், வாலிப வசந்தத்தில் அவன் காதலித்த நிலோஃபரை அவன் பார்க்க நேர்ந்ததும், அவள் தனது இரண்டு குழந்தைகளை அடையாளப்படுத்தியதும், "கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்; எனக்கு மணவிலக்கு ஆகிவிட்டது" என்று மெல்லிய குரலில் நிலோபர் சொன்னவுடன், நேயர்களின் யூகங்களுக்கு வாசல் அமைத்துவிட்டு இந்தக் காதல் ஓவியம் முற்றுப் பெற்றது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மார்ட்டின் லூதர் கிங் இவர்களின் பொன்மொழிகள் இடை இடையே பளிச்சிட்டதும், சுபஹானல்லா; அல்ஹம்ந்துலில்லா; அல்லாஹு அக்பர் என்று அந்த இஸ்லாமியர்கள் இச்சொற்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்தியதும், அரசியல் நிர்ணய சபையில், செந்தமிழ் மொழியே நாட்டின் தேசிய மொழியாக வேண்டும் என்று முழங்கிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் புகைப்படத்துடன் அவரது சொற்கள் மின்னியதும் மனதைப் பரவசப்படுத்தின.

இந்தத் திரைப்படத்தின் இசை இக்காவியத்தின் அடி நாதமாக ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒளிப்பதிவாளரும் தன் உச்சத்தைக் காட்டிவிட்டார். இந்தக் காதல் காவியத்தில் விரசம் என்ற சொல் பலகாத தூரத்திற்கு அப்பாலே ஓடிப்போய் விட்டது. நிகழ்கால அரசியல் சஞ்சலங்களை எல்லாம் மறந்து இந்தக் காதல் ஓவியத்தில் நான் மூழ்கிப் போனேன்.

இதனைப் படைத்த இயக்குநருக்கும், கதாசிரியருக்கும், பாத்திரங்களாக மாறிய நட்சத்திரங்களுக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துக்களை இதயத்தால் பொழிகிறேன்! 'ஹபீபி' திரைப்படம் ஆஸ்கர் விருதைவிட உயர்ந்த விருதைப் பெறக்கூடிய தகுதி வாய்ந்தது என்பதே இந்தத் திரைப்படத்திற்கு நான் தருகின்ற தீர்ப்பாகும்!