தமிழ்நாட்டிலிருந்து துபாய்க்கு எலக்ட்ரீஷியன் பணிக்காகச் சென்ற தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பவுன்ராஜ், அழகுராஜ், இராமசாமி, கணேசன், சரவணன் ஆகிய ஐந்து தமிழர்கள், தங்களுக்கு வேலை வழங்கிய நிறுவனம் உரிய ஊதியத்தை முறையாக வழங்காததை எதிர்த்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு எந்தப் பதிலும் வராத நிலையில், அவர்கள் துபாயில் உள்ள தொழிலாளர் உதவி மையத்தை நாடினர். இதனால் கோபமடைந்த நிறுவனம், அவர்களின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்காமல், வேலையிலிருந்து நீக்கி, எந்த இழப்பீடும் வழங்காமல், செய்த வேலைக்கான ஊதியத்தையும் தராமல் தெருவில் விட்டு விட்டது.
உணவுக்கும், தங்குமிடத்துக்கும் வழியின்றி சிக்கித் தவித்த அவர்கள், தங்கள் துயரத்தை துரை வைகோ எம்.பி., அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உதவி கோரினர்.
இந்த விவகாரத்தை உடனடியாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்களுக்கு தற்காலிகப் பாஸ்போர்ட் வழங்கி, துபாயிலிருந்து பத்திரமாகத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதற்கிடையில், மறுமலர்ச்சி திமுகவின் இணையதள அணிப் பொறுப்பாளர் மினர்வா ராஜேஷ், இசக்கி, சிவப்பிரகாசம், KNA அமைப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், சமூக ஆர்வலர் கள்ளக்குறிச்சி மகேஷ் ஆகிய சகோதரர்களின் உதவியோடு, பாதிக்கப்பட்ட ஐந்து தமிழர்களுக்கும் தற்காலிகத் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது. இந்த உதவியை உடனடியாகச் செய்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை துரை வைகோ எம்.பி., தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்கள் விரைவில் தாயகம் திரும்ப உள்ளதாகச் செய்தி வந்ததும், பாதிக்கப்பட்ட ஐவரும் துரை வைகோ எம்.பி., அவர்களுக்கு நன்றி தெரிவித்து காணொலி அனுப்பியுள்ளனர். அவர்கள் பத்திரமாக வீடு திரும்பினால் அதுவே தனக்குப் போதும். அதுதான் தனக்கு முழு மனநிறைவைத் தரும் என்று துரை வைகோ எம்.பி., கூறியுள்ளார்.
இதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஒன்றிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும் துரை வைகோ எம்.பி., தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுபோன்று, இதுவரை வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 20க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்டு, தாயகம் அழைத்து வர தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் துரை வைகோ எம்.பி., செய்துள்ளார்.
திருச்சி தொகுதி மக்களுக்காகக் கடமையாற்றுவதைப் போலவே, வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்வது தனக்கு மிகுந்த மனநிறைவையும் உந்து சக்தியையும் தருகிறது என்றும் இந்த மக்கள் பணி என்றென்றும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.




