தொன்னூற்றி ஆறாம் ஆண்டு - தன்
பயணச் சிறகுகளை விரித்துப் பறந்த
பிப்ரவரி திங்களில்....
முச்சங்க தமிழ்க் குலத்தின்
முத்திரை சங்கொலி
முதல் பிரதியாய்ப் பிறந்தது!
தொண்டைக் குழிக்குள்
துடித்துக் கொண்டிருந்த
உயிர் மூச்சு ஓயும் வரை
போராடிய பேரொளி
ஈரோட்டு இடி முரசு
ஈன்ற ஏடு குடியரசு!
வலியோர் வசமிருந்த
அரசியல் அதிகாரத்தை
அறிவாயுதத்தால் பறித்து
சாமானியனுக்கு கொடுத்த
அறிஞர் அண்ணா
அளித்தது திராவிட நாடு!
பெரியாரின் கருப்பை
துண்டாய் தோளிலும்
அண்ணா தொண்டை
எந்நாளும் நெஞ்சிலும்
தாங்கி நடைபோடும்
தன்மானச் சுடர் வைகோ
தந்த இதழ் சங்கொலி!
தேக்கு தோளோடு
திரண்ட வீரர் கூட்டம்
புறமுதுகு காட்டாமல்
போர் முழக்கமிட்டு
முன்னேறிப் பாய அன்று
முழங்கியது சங்கொலி!
இனத்துக்கு மொழிக்கு
கலைக்குப் பண்பாட்டுக்கு
உரிமைக்குச் சிறு கேடு
நிகழும் போதெல்லாம்
புரட்சிப் புயலின்
மறுமலர்ச்சிப் படை
களம் நின்று வென்ற
காட்சிகளைப் பதித்து
வெளிவரும் பட்டயம்
வெற்றிச் சங்கொலி!
முக்கடல் சங்கமிக்கும்
குமரிமண் தொடங்கி
முருகன் அருள் புரியும்
திருத்தணி மலையடிவரை
பரவி வாழ்கின்ற
புரவிநிகர் கண்மணியர்
கரங்களில் ஏந்துகின்ற
போர்வாள் சங்கொலி!
இடியாய் மின்னலாய்
எம்முயிர் வைகோ
மேடைகளில் முழங்கும்
தீப்பொறி உரைகள்....
கன்னலாய் கனியமுதாய்
கழகக் கண்மணியருக்கு
அவர் தீட்டும் கடிதங்கள்...
குறிக்கோளை சரியாய்
கோடிட்டு காட்டி அவர்
கொடுக்கும் அறிக்கைகள்...
ஆன்றோர் சான்றோர்
கவிஞர்கள் படைக்கின்ற
கட்டுரை கவிதைகள்...
இவற்றை உள்வாங்கி
பொன்னாய் புதையலாய்
வாரம்தோறும் வருகின்ற
போராயுதம் சங்கொலி!
சங்கொலி இதழில்
கருவாகி உருவான
கட்டழகுப் பெட்டகம்தான்
வான்புகழ் வைகோவின்
சிறையில் விரிந்த மடல்கள்
என்னும் கன்னல் நூல்!
நிகரற்ற போராளி
நேதாஜி தன் தாய்க்கு
வரைந்த கடுதாசியில்...
எனை ஈன்ற அன்னையே
உன் பிள்ளை நான்
மரணத்தை நோக்கிப்
பயணப்படுகிறேனெனினும்
மரணத்தால் என்னை
வென்றிடு முடியாது!
உன் பிள்ளையின்
குரலில் எழும் ஒலி
உலகே திகைத்திடும்
சங்கொலியாய் எழட்டுமெனும்
வரிகளை வடித்தார்!
நேதாஜிக்குள்ளும்
நம் சங்கொலி குன்றாய்
அன்றே நிமிர்ந்து நின்றதை
அறிந்திடும் போதினில்
நெகிழ்கிறது நெஞ்சம்!
வீரத்தின் இலக்கணமாய்
வரலாற்றில் நிலைத்த
வங்கத்துச் சிங்கம் பற்றி
பொடா சிறையிலிருந்து
நெஞ்சில் நிறைந்த நேதாஜி
தலைப்பில் தழல் வைகோ
சங்கொலிக்கு தீட்டியது
வெறும் கடிதமல்ல - அது
உணர்ச்சியின் உயிர் வடிவம்!
அண்ணா எனும் அறம்
அறிவுத் தளத்தினில்
இன்றும் ஒளி வீசி
பிரகாசிப்பதை - வேலூர்
வெப்பச் சிறையிலிருந்து
கண்ணின் மணிகளுக்கு
வைகோ கடிதமாய் தந்த
ஒளி மலர! இருள் அகல
கட்டுரைகள் தேன்தட்டு!
தொட்டதில் எல்லாம்
தோல்வியே கிட்டிடினும்
விடாமுயற்சி வாளால்
தோல்வித் தலை துண்டாக்கி
வெள்ளையர் தேசத்தில்
வெற்றியை ஈட்டிய
கருப்பர் இனச் சுடரொளி
ஆபிரகாம் லிங்கன் குறித்து
எங்களின் வைகோ
சங்கொலி ஏட்டினில்
எழுதிய கட்டுரைகள்
அமெரிக்க தேசத்திற்குள்
அழைத்துச் சென்றது எம்மை!
சிறுவயது முதலே - நான்
சிறுமைப்பட்டவனாய்
மாண்டு போகின்றவனாய்
மனம் கலங்குகின்றவனாய்
இருக்கிறேனெனச் சொல்லி
விழிகளில் நீர் கொட்டிய
லிங்கன் எனும் சிங்கம்
சாதித்துக் காட்டியதை
வைகோ எழுதிய தொடரில்
வாசிக்கும் போதினில்
முடியாது என்பதை
குழிதோண்டிப் புதைப்போம்!
முடியும் என்பதையே
விதைப்போமெனும்
நம்பிக்கை நெருப்பை
நம் உடலுக்குள் நிமிர்ந்து
எரிய விடுகின்றது!
உள்ளூர் அரசியலை
உலக வரலாற்றை
சங்கொலி ஆசிரியராய்
எனக்கு கற்பிக்கிறார்
சமர்க்கள வைகோ!
மாணவன் மணிவேந்தன்
மகிழ்ந்து ஏற்கிறேன்!
கைவிரலில் மை பூசி
காகிதத்தில் பதித்து அதை
கையெழுத்தென காட்டிய
கரிசல்காட்டு கைநாட்டு
என் தாய் சண்முகத்தாய்!
பத்து நிமிடம் ஒதுக்கி
பயத்தால் உடல் நடுக்கி
தன் பெயரை எழுதிவிட்டு
உலக அறிஞன்போல்
தன்னை உணர்ந்திட்ட
வெள்ளந்தி மாமனிதன்
என் தந்தை மாசானம்!
இவர்களின் பிள்ளையாய்
எளிய வீட்டில் பிறந்த
என் சிறு மண்டைக்குள்
சுரக்கும் கவி மழலையை
பிரசவித்து மகிழ்கிறாள்
பேரன்புத்தாய் சங்கொலி!
ஈழ வரலாற்றை
எழுதியோர் பட்டியலை
வரிசைப்படுத்திப் பார்த்தால்
அது மிக நீளக்கூடும்!
வலிமையும் வலியும்
நீக்கமற நிறைந்த
அந்த போராட்டம் சரித்திரத்தை
கவிதை வடிவிலே
தந்தவன் நான் மட்டுமே
என்ற இறுமாப்போடு
மணிவேந்தன் நான்
எழுதிக் கொடுத்ததை
நூறு வாரம் பிரசுரித்து
பேருவகை கொண்டது
வார இதழ் சங்கொலி!
வரலாறு வைகோவை
ஆசிரியராய் கொண்டு
முப்பது ஆண்டுகளாய்
வெளிவரும் சங்கொலியின்
ஆசிரியர் குழுவில் அடியேன்
கால் நூற்றாண்டு கடந்தும்
இருக்கிறேன் என்பது
ஈடற்ற பேராகும்!
ஈரோட்டு நெருப்பின்
விடுதலை ஏட்டினில்
அறுபது ரூபாய் சம்பளத்தில்
அண்ணா பணியாற்றி
இல்லாமையால் வாடிய
அந்த நாட்களில்...
செல்வந்தர் ஜி.டி.நாயுடு
அண்ணாவை அழைத்து
வீடு கார் தருகிறேன்
வேலைக்கு என்னிடம் - நீ
வந்திடு என அழைத்தபோது
தந்தை இருக்குமிடமே
தனயனுக்கு கோவிலென
சொல்லிய சொல்லருவியின்
கொள்கை வழிதொட்டு
கொடிபிடித்து நிற்கும்
மானமிகு கண்மணி நான்!
திராவிட இயக்கத்தின்
வலிய படைக்கலனாய்
வெளிவரும் சங்கொலிக்கு
சிறப்பிதழ் புத்தாடையை
உடுத்தி அழகு பார்த்து
உவகை கொள்கிறோம்!
பொன் விழாவை நோக்கி
நடைபோடும் சங்கொலி...
பவள விழா பூண்டிடும்!
நூற்றாண்டும் கண்டிடும்!
மறுமலர்ச்சி திமுகவின்
போர் முழக்கச் சங்கொலி
எங்கெங்கும் கேட்கட்டும்!
மானத் தமிழர் வரலாற்றை
வீழ்ந்திடாமல் மீட்கட்டும்!








