கொடியில் புலி உடையான் கரிகாலன்
குமுறி அந்நாளில் நிமிர்ந்த கடலில்
இடிநேர் காவலன் சுந்தரபாண்டியன்
எகிறிப் படை கொண்டெழுந்த பேராழியில்
அடிமையர் துயர் தீர்க்கப் பிறந்தவன்
ஆற்றலன் வைகோ சீற்றமுற் றெழுந்தான்!
ஈழத் தமிழனைச் சிங்கள வெறியன்
எகிறி மிதிக்க இவன் நெருப்பானான்!
ஆழக்கடலை உதைத்து நிமிர்ந்தான்!
ஆயிரம் புயல் ஆகி வெடித்தான்!
நீளக் கிடந்த கடல்நீர் கடந்தான்!
நிமிர்ந்த தடந்தோளன் தமிழ் நெஞ்சன்
வேழத் தலைவன் வைகோ விடுதலை
வேங்கைகள் ஈழ மீது கால் வைத்தான்!
சுற்றிலும் நின்றது சிங்களவர்படை!
சூழ வளைத்தது பாரதப் போர்ப்படை!
பற்றி எரியும் தீப்பிழம் பாகிப்
பக்கத் திருந்தது தமிழர் புலிப்படை!
நற்றமிழ் ஈழத் தமிழர் நிலத்தில்
நாயகன் வைகோ தீயென நின்றான்!
முடியுடை வேந்தன் கரிகாலன் படை
முன்னர் வெறிகொண் டெழுந்த முந்நீரில்
பொங்கி அதிர்ந்து வெடித்த கடலில்
போர் முரசார்த்த பேரலை ஓர்பால்
கங்கு கரைகள் உடைத்து நள்ளிரவில்
கடலை உதைத்த வெம்புயல் ஓர்பால்
சிங்களர் கொடும் கடற்படைக் கப்பல்
சினம் கொண்டுலாவும் அதிர்வொலி ஓர்பால்
இங்கிவை நடுவில் புலிகள் படகில்
இருந்தான் வீரன் எரிமலை வைகோ!
உற்றனர் ஈழத் தமிழர் பேருவகை!
உறுமி வெடித்தது விடுதலை முரசே!
உலகவிடுதலை யாளன் உலைநெஞ்சன்
ஒப்பிலான் பிரபாகரன் கண்களில்
அலை கொண்டெழுந்தது பேரொளி! செந்தமிழ்
அன்னை நாடாம் தமிழ்நாட்டின் வேங்கை
நிலமகள் பெற்ற நெருப்புமகன் வைகோ
நேர்வரப் பிரபாகரன் நெகிழ்வுற்றனன்!
மலையும் அருவியுமாய் அவர் ஆயினார்!
மண்ணின் திசைநாலும் சங்கொலி ஆர்த்ததே!
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்








