நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான 20.07.2026 அன்று, நாடாளுமன்றத்தில் இரு முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு நடவடிக்கையில் துரை வைகோ எம்.பி., ஈடுபட்டார். அதன்பிறகு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி ஆற்றின் நடுவே கர்நாடக அரசு மேகேதாட்டில் அணை கட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும்,
கர்நாடக அரசே! கர்நாடக அரசே!
காவிரி ஆற்றின் குறுக்கே
மேகேதாட்டில் அணை கட்டி
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காதே!
ஒன்றிய அரசே! பாஜக அரசே!
வேடிக்கை பார்க்காதே! வேடிக்கை பார்க்காதே!
மேகேதாட்டில் அணை கட்டும்
கர்நாடக அரசை அனுமதிக்காதே!
கைவிடு! கைவிடு!
அணைகட்டும் முயற்சியை
கர்நாடக அரசே கைவிடு!
அனுமதிக்காதே! அனுமதிக்காதே!
அணைகட்டும் முயற்சியை
ஒன்றிய அரசே அனுமதிக்காதே!
என்று துரை வைகோ எம்.பி., முழக்கங்கள் எழுப்பினார்.
மேலும், நாடு முழுவதும் தேசியத் தேர்வு மையம் (NTA) நடத்தும் தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட முறைகேடுகள், அதில் 10 முறை NEET வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இதுகுறித்து உடனடியாக விவாதிக்கக் கோரியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களோடு துரை வைகோ எம்.பி., அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்டார். இதனால் அவை நடைமுறை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
NEET தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, காங்கிரச் ஜனநாயக கட்சி (CJP) உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றபோது, காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்ததை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது ஜனநாயக மீறல், இந்திய அரசமைப்பு வழங்கிய உரிமையை பறிக்கும் செயல் என்றும்,
மேலும், முறைகேடுகளுக்கு எதிராக கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் திரு. சோனம் வாங்சுக் அவர்களை, அவரது விருப்பத்திற்கு எதிராக கைது செய்து மருத்துவமனையில் சிறை வைத்திருப்பதையும் துரை வைகோ எம்.பி., கண்டித்துள்ளார்.
கல்வித்துறையில் இவ்வளவு பெரிய முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும் பதவி விலகாத ஒன்றிய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களையும், அவரைப் கண்டிக்காமல் பதவியில் நீடிக்க வைத்திருக்கும் ஒன்றிய பாஜக அரசையும் துரை வைகோ எம்.பி., வன்மையாகக் கண்டித்தார்.







